Tuesday, 19 February 2013

விஸ்வரூபம்





இந்த படம் பண்ணிய பிரச்னை எல்லோரும் அறிந்ததே. அப்படி ஒன்றும் இதில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. 

வெறும் பேப்பரில், டிவியில் மற்ற மீடியாக்களில் வந்த ஆப்கானிஸ்தான் பற்றிய விவரங்களை சேகரித்து கோடிக் கணக்கில் கொட்டியதாக(?) சொல்லி படம் பண்ணி வியாபாரம் செய்ய வழி தேடி கடைசியில் அம்மாவுடன் under table dealing பண்ணி சமர்த்தாக படத்தை விற்றுவிட்ட சந்தோஷம் கமலஹாசனின் முகத்தில் தெரிந்தால் அது ஆச்சிரியபடுவதற்கு இல்லை. 



இதில் ஏமாந்தவர்கள் கமலின் ரசிகர்கள் தான். படத்தை பார்க்க ப்ளைட் பிடித்து ட்ரெயின் பிடித்து அடுத்த மாநிலத்துக்கு எல்லாம் போய் காசை செலவழித்து இந்த ஒன்றுமே இல்லாத டாகுமெண்டரி படத்தை பார்க்க போன அவர்களை சொல்லணும். படத்தில் ஒன்றுமில்லை என்பது தெரிந்தவுடன் ஆஹா..ஓஹோ ...என்று பொய்யாய் பிரசாரம் செய்து மனச் சமாதானப்பட்டுக் கொண்டார்கள். பாவம் தான்....அடுத்த முறை சூடு போட்டுக் கொள்ளமாட்டார்கள். நம்புவோம்.....



நான் இப்படி எழுதுவதற்காக, 'அறிவு ஜீவிகளுக்கு தான் புரியும் இந்த கதை' என்கிற கதையெல்லாம் இங்கு வேண்டாம். நாலு இங்கிலீஷ் படத்தையும் ஐந்து சத்யஜித் ரே படத்தையும் பார்த்தவன் தான் அறிவுஜீவி என்றால் நாங்களும்  அந்த மாதிரி நாற்பது படம் பார்த்துவிட்டுதான் இதை எழுதுகிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

கமல் முத்திரையுடன் ஒரு படம் வந்தால் அது அறிவுஜீவிகளுக்கானது தான் என்று யார் சொன்னது?.... 

எடுத்தவுடன் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் பிராமண பாஷையை பேசி மற்ற தமிழர்கள் யாரும்  அமெரிக்காவில் வசிக்கவே தகுதியில்லாதவர்கள் என்பது மாதிரி காட்டியிருக்கிறார்கள். வன்மையாக கண்டிக்கதக்க ஒரு விஷயம் இது. சொல்லப் போனால் இந்த படத்தை எதிர்த்து இதுக்கு தான் போராடியிருக்கணும்.

ஒரு படத்துல காசு வாங்காம, இல்ல.. கொஞ்ச சீனுல மட்டும் வந்து போறவங்களை ஏதோ சொல்லுவாங்களே....ஆங்...Guest Appearance... அந்த மாதிரி கமல் இந்த படத்துல....சுத்தமா நடிக்கவே இல்லை...

ஒரு போராளி கூட்டத்துக்குள்ளே வேவு பார்க்க போகிறவன் எந்த மாதிரி இருப்பான்னு தெரியாத அளவுக்கு நம்ம பொது ஜனத்துக்கு அறிவில்லாம இல்ல. ஏதோ நம்ம ஊரு ஜனாதிபதி வெளிநாடு சுற்று பயணம் போவாருல்ல அந்த மாதிரி கமல் அங்கே போனவுடன் அந்த கூட்டத்தில இருக்கிறவங்க இவரை வரவேற்கிறதென்ன சுத்தி காமிக்கிறதென்ன....ரொம்ப காதுல பூ சுத்தாதீங்க கமல் சார்......



ஒரே விஷயத்தை மட்டும் கமல் இந்த படத்தில மீண்டும் நிருபிச்சிருக்கார். அது என்னன்னா டான்ஸ்...பிஜூ மகாராஜ் அவர்களின் துணையோடு அழகாக ஆடியிருக்கிறார். அதுக்காக இவ்வளவுவுவுவு.....நீள பாட்டு வேணுமா....




இந்த படத்துல கொஞ்சம் வித்தியாசப்படுவது ஆண்ட்ரியா மட்டுமே. அழகாகவும் இருக்கிறார். அளவாகவும் நடித்திருக்கிறார். 

வேற எதுவும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை...

இந்த மாதிரி ஒரு சாதாரண படத்துக்கு இனி யாராவது பந்தா பண்ணினா அதுக்கு எதிரா நாம தான் விஸ்வரூபம் எடுக்கணும்...


Saturday, 5 January 2013

கும்கி - யானை





Director: Prabhu Solomon
Music Director: D. Imman
Lyricst: Yugabharathi
Vikram Prabhu, Lakshmi Menon, Thambi Ramaiya 


படம் வந்து ஒரு மாசம் கழிச்சு அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவது ரொம்ப நல்லது. 
ஏன்னா,
  •  அப்போதானே எல்லோரும் படத்தை பார்த்து முடிச்சிருப்பாங்க. முதல் ரெண்டு நாள்ல எழுதினா யாருக்குமே புரியாது. எவ்வளவு மார்க் போட்டிருக்காங்கன்னு மட்டும் தான் பார்ப்பாங்க. 
  • அதே மாதிரி, நான் எழுதுறதும் அவங்களுக்கு புரியும். அவங்களும் நான் படத்தை விமரிசித்ததில் ஏதாவது தப்பு இருந்தா சொல்ல முடியும்....

அப்பாடா...லேட்டா படத்துக்கு விமர்சனம் எழுதுறதுக்கு எத்தனை சப்பைக்கட்டு சொல்ல வேண்டியிருக்கு....

சரி...இனி கும்கி யானையை பார்ப்போம்...

இந்த படத்துக்கு கும்கின்னு பெயர்  வச்சிருக்காங்க....ஊரு பக்கம் இருக்கிறவங்களுக்கு கும்கிக்கு அர்த்தம் தெரியும். சிட்டியில இருக்கிறவங்களுக்கு தெரியவே தெரியாது. ஒரு லைன் அதை பத்தி சொல்லியிருக்காங்க....அது போதுமான்னு தெரியலை...

இந்த படத்தை ரெண்டாக பிரிக்கலாம்....
ஒண்ணு காதல், ரெண்டு யானை


  • காதல்


காதலா இது...கவிதை + காவியம் மாதிரி இருக்கு.....காதலின் முதல் பாதியில் ஹீரோ விக்ரம் பிரபு புதுமுகம் மாதிரியே இல்லாமல் அழகாய் உருகுகிறார். யானை பாகன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்வாகு. நன்றாக பொருந்துகிறார். 




கதாநாயகி லட்சுமி மேனன் தானா என்பதில் எனக்கு  சந்தேகமாக இருந்தது....சுந்தரபாண்டியனில் பெரிய பெண்ணாக தெரிந்த இவர் இதில் சின்ன பெண்ணாய், அழகாய், மிக அழகாய்....ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் இடை கூடவா எடை கூடும்?...ம்ம்ம்....யோசிக்க வேண்டிய விஷயம்தான்....



காதலின் கிளைமாக்ஸ் 


படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ஹீரோ பேசும் வசனம் 'மதம்  பிடிச்சிருந்தது உனக்கில்லடா மாணிக்கம்...எனக்குதான்...' என்பதும், 'நான் ஏண்டி உன்னை பாத்தேன்'  என்னும் போது விழும் ஒரு துளி கண்ணீரும் யானைக்கும் அந்த மதம் பிடித்த காதலுக்குமாக ஒரு சமாதியை அழகாய் கட்டிவிடுகிறது...டைரக்டர் பிரபு சாலமன் தான் சொல்ல வந்ததை மிக தெளிவாய் நம் முன் வைத்திருக்கிறார்...

அந்த காதல் தவறில்லை என்று நம் மனதுக்கு படும்படியாகவும் எடுத்திருக்கும் விதம் அருமை.  அவனின் காதல் தான் அனைத்துக்கும் காரணம் என்கிற போது அதை எவ்வளவு அழுத்தமாய் நியாயப்படுத்த முடியுமோ அதை நேர்த்தியாக செய்த பிரபு சாலமனை பாராட்டியே ஆகவேண்டும்...


அவன் காதலை தப்பாக்க யானையை கொன்றிருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. ஆனால் அந்த ஒரே ட்விஸ்ட்டில் தான் காதலை ஆழமாய் நம் மனதில் பதியவைக்க முடிகிறது. கதை என்ற ஓன்று இருப்பதை காட்டுகிறது.


  • யானை 

யானையை சொல்லணும்....முதல்ல அதுக்கு திருஷ்டி சுத்தி போடணும். அப்புறம் ஒரு அவார்ட் கூட கொடுக்கலாம். அவ்வளவு க்யூட்டா இருக்கு....நான் என் சிஸ்டம் வால்பேப்பரில் கூட யானையை வைத்துவிட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்....

அந்த யானையின் கண்ணை அடிக்கடி காட்டுவதால் யாராவது ஏதாவது சொன்னால் யானை என்ன நினைக்குதுன்னு அது கண்ணை பார்க்கும் ஆசை வருகிறது நமக்கு. 



முதலில் வரும் 'கொம்பன்' என்று சொல்லப்படும் யானை மிக ஆக்ரோஷமாய் அனைத்தையும் அழித்து துவம்சம் பண்ணி மதம் பிடித்த வெறியை நல்லா காட்டியிருக்காங்க. அந்த யானையை விரட்ட தான் நம்ம கும்கி வருகிறது உள்ளே. எப்போ அந்த யானை வரும்ன்னு ஊர்க்காரங்களை விட நம்மை ரொம்ப உசுப்பு ஏத்தி விட்டு விடுகிறார் டைரக்டர்.

ஆனால் அந்த யானை கடைசியில் வரும்போது அதன் கம்பீரத்தையோ ஆதிக்கத்தையோ காண முடியவில்லை. 


யானை கிளைமாக்ஸ் 


ஒரு நாள் கூட ஓடாத படங்களில் கூட கிளைமாக்ஸ் சண்டை அரை மணி நேரமாவது ஓடும். கடைசியில ஹீரோ தான் ஜெயிப்பாருன்னு தெரிஞ்சும் தாங்க முடியாத தலைவலியோட அதையெல்லாம் நாம பார்த்திருக்கோம். 

ஆனால் இந்த படத்துல டைரக்டர் நம்மை ஏமாற்றிய இடம் இது ஒண்ணுதான். ஒரு இருபது நிமிஷமாவது யானைகளின் சண்டையை காண்பித்திருக்கலாம். எல்லாமே கிராபிக்ஸ் வேற. சரி அதையாவது நல்லா காட்டியிருக்கலாம். சண்டை நடக்கும் போது எது மாணிக்கம் எது கொம்பன் என்று வித்தியாசமே தெரியவில்லை. 

அந்த யானையின் சாவு ஹீரோவை வேற மாதிரி யோசிக்க வைத்தா நாம 'ஐயோ யானை செத்து போச்சே' என்று யானையை மிஸ் பண்ணிட்ட பீலிங்கோட இருக்கோம். நாமளும் ஹீரோவும் வேறுபட்டு போகிறோம் அந்த யானையின் மறைவில்.....

தம்பி ராமையா 


எல்லாத்தையும் சொல்லிட்டு தம்பி ராமையாவை சொல்லாம விட்டா பாவம் பிடிக்கும் நமக்கு. முக்காவாசி கதையை அவர்தான் தன் முணுமுணுப்பால் சொல்லுகிறார். அப்பப்போ சந்தடி சாக்கில ஹீரோவையும் யானையையும் கலாய்த்து தள்ளுகிறார். நல்லா நடிச்சிருக்கார் அவர். இந்த முறை Supporting Actor அவார்ட் அவருக்கு கண்டிப்பா கிடைக்கும்.....

ஆனா ஒரே ஒரு சந்தேகம், எப்படி அவர் மட்டும் இவ்வளவு இங்கிலீஷ் வார்த்தைகள் பேசுகிறார்.
அடுத்தது அவர் மனசுக்குள் பேசும் காட்சிகள் அதிகம். நமக்கே சில இடங்களில் அலுப்பு தட்டுகிறது.  

ஹீரோ கம்மியா பேசுறார்...ஹீரோயின் பேசவே மாட்டேங்கிறா....நமக்கே தெரியும் யானை பேசாதுன்னு ...தம்பி ராமையாவை தவிர யாராவது வாயை திறந்து பேசமாட்டங்களான்னு தோணுது. 


அப்புறம் மாதையன் சமத்தான அப்பாவா வந்து போறார்...


இசை 

பாட்டு எல்லாமே உருக்குகிறது. இமானின் இசையில் யுகபாரதியின் வரிகள்....வசீகரம்....
பென்னி தயால், இம்மான், ஹரிசரண், ரஞ்சித், அல்போன்ஸ் என்று பாடகர்கள் களைகட்டியிருக்கிறார்கள்.....கேட்டுகிட்டே இருக்கலாம் போல.....
   

கும்கி......


மிருகங்களை வைத்து படம் எடுத்தவர்கள் நம்மை ஏமாற்றியதில்லை இதுவரை. அந்த படங்களில் எல்லாம் மிருகங்களை பயன்படுத்தி இருப்பாங்க. இந்த படத்தில் மட்டும் தான் கதையோட பின்னியிருக்காங்க அதுங்களையும்....

பிரபு சாலமனுக்கு தாராளமா தரலாம் யானை பாகன் பட்டம்....அதுவும்கும்கி யானை பாகன்.....


Thursday, 27 December 2012

நீதானே என் பொன் வசந்தம்







டைரக்டர்....



கௌதம் வாசுதேவ் மேனன் என்கிற பெயர் பலகை தாங்கி வெளிவந்திருக்கிற படம். இவரைவிட இளையராஜா என்கிற கிராமத்து கலைஞனின் இசைத்தட்டை சுமந்து வந்த படம் என்பதை சொல்வது பொருத்தம்.

படம் பார்த்த பிறகு எனக்கு என்ன தோணுச்சுன்னா இசை வெளியீட்டு விழாவோடே 'இத்துடன் இந்த படம் முடிந்தது' என்று சரோஜ் நாராயணசாமியை வைத்து ஒரு end card போட்டிருக்கலாமோன்னு....

இந்த படத்துக்கு இவ்வளவு பெரிய hype யை ஏற்படுத்தி நம்மை இப்படி ஏமாற்றியிருக்க வேண்டாம். எப்போ ஹீரோ ஸ்கூல் படிக்கிறாரு...எப்போ காலேஜ் படிக்கிறாரு...எப்போ IIM ல PG பண்றாரு...ஒண்ணுமே புரியல...

கௌதம் முதல்ல உங்க காலேஜ் லைப்பை பிட் பிட்டா படம் எடுக்கிறதை நிப்பாட்டுங்க. எங்களுக்கு ரொம்ப போர் அடிக்குது. வேற கதை பண்ணுங்க கௌதம்...நீங்க படிச்ச காலத்தை விட்டு வெளியே வந்த பிறகு சொல்லி அனுப்புங்க. நாங்க படம் பார்க்க வரோம்...



ஹீரோ....



ஜீவா ஸ்கூல் படிக்கும் போது பெரிய பாடி பில்டர் மாதிரி உடல், matured முகம், காலேஜ் படிக்கும் போது ஸ்கூல் பையன் மாதிரி முடியை க்ளோஸ் கட்....நல்ல வேளை IIM படிக்கும் போது காட்டலை. ஏன்னா ஹீரோயின் அங்க படிக்க போகாததாலே நாம தப்பிச்சோம்....

இந்த படத்தை ஏனோதானோன்னு பண்ணியிருக்கார் ஜீவா. முகமூடி தோல்வி அடைந்ததாலா என்னமோ தெரியலை....கடைசி  சீன்ல மட்டும் கொஞ்சம் சின்சியரா பண்ணியிருக்கார். 


இனிமேல் இந்த ஸ்கூல் பையன் ரோல் எல்லாம் கொஞ்சம் ரிஸ்க் ஜீவாவுக்கு. அது எல்லாம் தனுஷ் மாதிரி ஒல்லிகுச்சிகளுக்கு சரிவரும். 



ஹீரோயின் 



சமந்தாவை நான் ஈ படத்தில் பார்த்ததில் இருந்து கொஞ்சம் பிடித்திருந்தது. இந்த படத்தில் அதை காப்பாற்றியிருக்கிறார். 

Barbie doll  மாதிரி அழகாய் இருக்கிறார். நல்லாத்தான் பேசுகிறார். சோகம் நல்லா வருது. அழுகை எல்லாம் ஓகே. அது என்ன கோபம் வரும்போது மட்டும் வலிப்பு வந்த மாதிரி கை கால் எல்லாம் உதறுது.  


ஸ்கூல் பொண்ணா, காலேஜ் பொண்ணா, அப்புறம் வேலை பார்க்கும் போது என்று எல்லா மேக்கப்பும் அழகாய் பொருந்துகிறது சமந்தாவிற்கு. 



காமெடி 



சந்தானம் இந்த படத்தில் கொஞ்சம் தானே நடித்த மாதிரி தெரிகிறது. கடிக்கிற காமெடியை கொஞ்சம் அளவோடு செய்திருக்கிறார். யார் அந்த குண்டு பெண்....சில இடங்களில் ஓவர் ஆக்டிங். மற்றபடி ஓகே....


இசை 



இசைஞானியின் மெட்டு மட்டுமே தாளம் போட வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் எப்போதோ தியேட்டரை விட்டு வெளியே வந்திருப்பேன்... 


சுபம் 




போதும் காபி குடிச்சுகிட்டே படிச்சது. எழுந்து வேற வேலை இருந்தா பாருங்க. இதுக்கு மேல எழுத படத்துல ஒன்னும் இல்லை. 


இது பொன் வசந்தம் இல்லை....நமக்கு முன்னாடி படம் பார்க்க போனவங்க தொலைச்ச வசந்தம்....


Sunday, 16 December 2012

நீர்ப்பறவை - ஓர் அலசல்...





Cast : Vishnu, Sunaina, Nanditha Das, Samuthra Kani
Director : Seenu Ramasamy
Producer : Uthayanidhi Stalin
Music : N R Ragunanthan

நீர்ப்பறவை என்பது Gull (Sea Gull) இன்னும் பறவையை குறிக்கும். அந்த பறவை ரொம்ப அறிவாகவும் கூட்டமைப்பான வாழ்வு முறைகளையும் பின்பற்றக்கூடியது என்று கேள்விபட்டிருக்கிறேன். 

ஆனால் இந்த படத்தில் அந்த பறவையின்  அறிவாளித்தனத்தை காணவில்லை. அந்த மீனவ மக்களின் வாழ்வியல் மட்டும் அழகாக காட்டப்பட்டுள்ளது. 



இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு...சரியாகவே கதாபாத்திரத்துக்குள் ஒட்டவேயில்லை. இந்த மாதிரி படங்களில் யதார்த்தமாய் நடிக்கவேண்டும். வேறு நடிகரை தேர்ந்தெடுத்திருக்கலாம். 

குடிகாரனாய் வரும் காட்சிகளில் மனதில் நிற்கவேயில்லை. அவருடைய அம்மா, அப்பாவாக வருபவர்கள் மட்டுமே நம் கவனத்தில். 



நேர் எதிர்பதமாக நம் கதாநாயகி சுனைனா சூப்பர்.  சரியான தேர்வு.பெரும்பாலும் இந்த மாதிரி costumeயில் ஹீரோயின்  அழகாக தெரியமாட்டார். சுனைனா அழகாகவும் இருக்கிறார். யதார்த்தமாய் நடித்தும் இருக்கிறார்.    



மற்ற எல்லோரும் படத்தின் தன்மை அறிந்து செய்திருக்கிறார்கள். சமுத்திர கனி சாட்டை படத்திற்கு அப்புறம் இதில். அளவாய் கண்ணிலே கண்ணியம் காட்டியிருக்கிறார். 



நந்திதா தாஸ் எல்லோரையும் விட ஒரு பிடி அதிகமாகவே செய்திருக்கிறார். இந்த மாதிரி நிறைய படம் செய்த அனுபவம் தெரிகிறது.

மீனவர்களின் வாழ்க்கையும் அவர்களின் கிறிஸ்துவ சமய சார்பையும் அளவாக எடுத்துரைத்திருக்கிறார் டைரக்டர். அதுவும் பாதிரியாரின் பேச்சுக்கு கட்டுப்படுதல் போன்ற விஷயங்கள் கூட மிகைப்படுத்தாமல் காட்டப்பட்டுள்ளது.



தகப்பனும் தாயும் சேர்ந்து இலங்கை ராணுவத்தால் சுடப்பட்ட தன் மகனின் உடலை தங்களுடன் வைத்து கொள்ள வேண்டி தன் வீட்டிலேயே புதைத்து வைப்பது எல்லாமே நடைமுறை சாத்தியம். அந்த பாசம் நிஜம் என்பதை நம் கண்ணில் இருந்து வரும் ஒரு துளி நீர் சாட்சி.


கண்ணில் தப்பாய் பட்டவை : 


பாடல்கள் எல்லாமே ஏதோ திருசபை கூட்டத்திலிருந்து ரகுநந்தன் எழுந்து வந்த மாதிரி தேவதூதனின் துதியாய் இருக்கிறது. திகட்டுகிறது. ஒரு மதம் சார்ந்த மக்களை வைத்து படம் பண்ணும் போது அணைத்து பாடல்களுமே அந்த மதம் சார்ந்த இசையின் அடிப்படையிலே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.   

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் எடுக்கும் தன்மை சமீப காலமாய் அதிகரித்துவருகிறது. நல்லதுதான். 

வழக்கு எண் 18/9 படமே முதல் தடவை பார்க்கும் போது புரியாத மாதிரியும் இரண்டாம் முறையே புரிந்ததாகவும் என் தோழிகள் சிலர் சொன்னார்கள்.  

அதற்கு காரணம் எல்லா சஸ்பென்சையும் கடைசி நேரத்தில் அவிழ்க்க நினைப்பது. அதற்கு சீன் continuity தேவையாகிறது. அப்போது repetition ஆகிறது சில காட்சிகள். அதுவும் இல்லாமல் முதலில் இருந்து புரியாமலே ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைசியில் தான் புரிகிறது. தியேட்டர் விட்டு வரும் போது நம் தலையில் ஏதோ பாரம் ஏத்தி வைத்தது போல் தோன்றும். 

சரி அந்த படத்தை விடுவோம். இதிலும் அதே தப்பைதான் செய்திருக்கிறார்கள். ஏதோ கதாநாயகியே கொலை செய்தது போலும் அவள் என்ன காரணம் சொல்வாள் என்று நம்மை யோசிக்க வைத்துவிட்டு வேறு மாதிரி முடித்துவிட்டார்கள். 

இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?....
டைரக்டர் படத்தில் முக்கியமாக இலங்கை ராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டு தள்ளுவதை பற்றி சொல்ல வந்து, அதற்காக ஒரு கோர்ட் சீனும் வைத்து, ஆனால் அதை இந்த சஸ்பென்ஸ் விஷயத்தால் சப்பென்று ஆக்கிவிட்டார். சொதப்பிவிட்டார். 

இனிமேல் நிஜ விஷயங்களை படம் எடுப்பவர்கள் இந்த தப்பை செய்யாமல் இருப்பார்கள் என்று நம்புவோம். 

Thursday, 15 November 2012

துப்பாக்கி

Feel The Army



Cast & Crew 
Director : A R Murugadoss
Producer : S Dhanu
Music : Harris Jeyaraj
Cinematography : Santhosh Sivan


முதல் நாளே துப்பாக்கி பார்க்கணும்னு ஒரு முடிவோட இருந்தேன். குடும்பத்தில் எல்லோரும் எனக்கு எதிராக இருக்க (விஜய் படமாம் - குப்பை படத்தை டிவிகாரன் போட்டா உட்கார்ந்து பார்ப்பாங்க ) , நான் பிடிவாதமாக இருக்க, இரண்டாம் நாள் inox தியேட்டரில்....படம் நல்லா இல்லையென்றால் குடும்பமே என்னை காலி செய்துவிடுவதாக மிரட்டிதான் வந்தார்கள். படம் முடிந்து வெளியே வந்தபிறகு எல்லோரும் பேசிக்கொண்டே இருந்தார்கள் படம் சூப்பர்ன்னு.....என்னை மறந்துபோய் வெகு நேரம் ஆகி இருந்தது....சூப்பரு....





முதல்ல டைரக்டர் முருகதாஸுக்கு ஒரு பெரிய சபாஷ்...
போலீசை வைத்து நிறைய கதை, சென்டிமென்ட் பக்கத்தை டச் பண்ணாம கூட எடுத்திருக்காங்க.  ஆர்மியை வைத்து கதை பண்ணுவது கொஞ்சம் கடினம்தான். ராணுவம் செய்கிற வேலை எதுவும் நம்மை பெரிதாக கவர்ந்ததில்லை....

இதுவரை வந்த படங்களில் எல்லாம் ராணுவ வீரன் லீவில் ஊருக்கு வந்தால், ஒன்னு குடும்பத்தை அழிச்சவங்களை பழி வாங்குவான், இல்ல கும்மாளமா காதல் பண்ணுவான்....பாக்கியராஜ் முதல் சரத்குமார் வரை இப்படித்தானே கதை பண்ணியிருக்காங்க..இல்லேன்னா நம்ம விஜயகாந்த் மாதிரி one man armyயா கதை பண்ணியிருப்பாங்க...

இதுதான் முதல் முறை ஆர்மியில் வேலை பார்க்கும் இளைஞன், தீவிரவாதிகளை எப்படி தேசப்பற்றுடனும் (பாரா பாராவாக டயலாக் இல்லாமல் ) புத்திசாலிதனத்துடனும் தண்டிக்கிறான் என்று காட்டப்பட்டுள்ளது. 

இதற்கு கதை ஒன்றும் பெரிதாக தேவைப்படவில்லை. ஆனால் படமாக்கி இருக்கும் விதம்தான் இயக்குனருக்கு சபாஷ் போட வச்சிருக்கு. 

விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோவுக்கு மேல் தன் முத்திரையை பதித்திருக்கிறார். 
விஜய்யை பொருத்தவரை இந்த படம் கில்லி மாதிரி ஒரு milestone படம்தான். பழைய கோபக்கார விஜய்யை  இந்த படத்தில் மீண்டும் மெருகேற்றியிருக்கிறார் டைரக்டர். 

விஜய் fansக்கே தெரியும், இதுவரை வந்த படமெல்லாம் எவ்வளவு கேவலமாக இருத்தது, நண்பனை தவிர (ரீமேக் ஆனதால் தப்பித்தது) என்பது. 



நம்ம ஹீரோ பத்தி சொல்லணுமே. படம் பார்க்க போனதே விஜய்காகதானே....கண்ணில் துப்பாக்கியும் காதலில் காமெடியும் செய்து கலக்கியிருக்கிறார். விஜயை விட துறுதுருப்பாக இந்த படத்தில் நடித்திருக்க முடியாது. முதலில் 12  தீவிரவாதிகளை கொல்லும் காட்சியில் அதை படமாக்கிய விதமும் சரி அதை விஜய் வேகமாக செயல்படுத்தி இருப்பதும் அழகு. 

கடமையை மெயின் டிராக்கிலும் காதலை காமெடி டிராக்கிலும் முதல் சீன்லே இருந்தே ஓட்டியிருக்கிறார். ஜெயராம் அடிக்கும் லூட்டி நல்ல இருக்கு. 





காஜல் சான்சே இல்ல....காஜலின் கண்கள் காதலாகவும் பேசுது, கலக்கலாகவும் பேசுது. ஆனா பாவம் நிறைய இடங்களில் டிரஸ் தான் சின்னதா போச்சு. விஜய் படத்தில இதெல்லாம் இல்லைன்னா ஹீரோயின் எப்படி எங்க ஹீரோவுக்கு முன்னாடி அழகா தெரிவா? ....

சத்யன் இந்த படத்தில் SI ஆக வருகிறார். கொஞ்சம் காமெடி தான். அதை கரெக்டா பண்ணியிருக்கார். 





வில்லனாக வரும் வித்யூத் ஜம்வால்  எல்லா படத்திலேயும் வரும் வில்லன் போல்தான். அவரை இங்கிலீஷில் மட்டுமே பேசவைத்து ஒரு பில்ட் அப் கொடுத்து வித்தியாசப்படுத்திவிட்டு கிளைமாக்ஸ் மட்டும் தமிழ் பேச வைத்து அந்த கதாபாத்திரத்தை சற்று நிமிர்த்தியிருக்கிறார் முருகதாஸ்....

கதையிலும் வில்லன் ஹீரோவை கண்டுபிடிக்க தன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது நாமும் கூடவே யோசிப்பது போல ஒரு புத்திசாலித்தனமான மாயையை உண்டாக்கியிருக்கிறார். இந்த மாதிரி விஷயங்களில் நிறைய கவனம் செலுத்தியிருப்பது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். 

சில லாஜிக் (ஹீரோ வில்லனை துப்பாக்கி இருக்கும் போது கை சண்டைக்கு தூண்டுவது) பழைய காப்பி தான் என்றாலும், நிறைய புது முயற்சிகளுக்காக அதை மன்னித்துவிடலாம். 




சண்டை காட்சிகள் பிரமாதம். அதை படமாக்கிய விதத்திற்கு சந்தோஷ் சிவனுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். ஒரு ஆர்மிகாரனின் ஆக்ரோஷமான சண்டை, தண்டிக்க தயங்காத உணர்வு எல்லாமே இருக்கிறது பைட்டில்.

கத்தி, துப்பாக்கி என்று எதை கையில் எடுத்தாலும் அதை வைத்து ஈஸியாக எதிராளியை கொன்றுவிடுகிறார். அது தவறு என்று நாம் யோசிப்பதற்கு முன் அடுத்த அடி என்று சண்டையில் stunt master  கலக்கியிருக்கிறார். அருமை....





ஹாரிஸ் ஜெயராஜின் இசை மட்டும் மனதில் பதியவில்லை.  எல்லா பாடலுமே ஒரே மாதிரி melodious ஆக இருப்பதுபோல் தோன்றியது. 

google லிலும் yahoo விலும் தேடிய பாட்டு மட்டுமே தாளம் போட வைக்கிறது. விஜய் படம்ன்னா ஒரு intro song,  ஒரு குத்து பாட்டு என்று நாமதான் எதிர்பார்த்து பழகிட்டோம். அதை மாத்திக்கணும் போல....

D R கார்த்திகேயன் (Former Director of CBI) அவருக்கும் ஒரு தேங்க்ஸ் ஸ்லைடு போட்டிருந்தார்கள். இவரின் பங்களிப்பு அடித்தள கதையை பலப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

 இந்திய ராணுவம் என்பது ஏதோ பார்டரில் சுடுவது, இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைப்பது, குடியரசு தினத்தன்று அலங்கார வாகனங்களில் நின்று சல்யூட் அடிப்பது என்றுதான் பார்த்திருக்கிறோம். அதற்கு மேல் நாம் அவர்களை பற்றி பெரிதாக யோசித்ததில்லை.

அவர்களை நம்மோடு...அதாவது பொது ஜனத்தோடு...இணைத்து பார்க்க மறந்திருக்கிறோம். நம் மனதில் அவர்களை ஒட்ட வைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் முருகதாஸ்.  விஜய் படம் என்றில்லாமல், முருகதாஸ் விஜய் காம்போ என்பது போல இருந்தது படம். இந்த மாதிரி படங்களை வரவேற்போம்.  

உண்மையிலேயே துப்பாக்கியை இந்த தீபாவளிக்கு வெடிக்க வைத்திருப்பது அழகு...


Tuesday, 25 September 2012

சுந்தரபாண்டியன்....

கலக்கல் பாண்டியன்....



படத்தின் பயோடேட்டா :
இயக்குனர் : பிரபாகரன்
இசை : ரகுநந்தன்
ஒளிப்பதிவு : பிரேம்குமார்
தயாரிப்பு : சசிகுமார்
நடிகர்கள் : சசிகுமார், லக்ஷ்மி மேனன், சூரி, விஜய் சேதுபதி, பிரபாகரன்



நம்ம சுந்தரபாண்டியன்.....



படம் பார்க்க போனா சந்தோஷமா பார்த்துட்டு வரணும்ங்கிற இலட்சியதோட வாழுறவ நானு.  அழுமூஞ்சி படங்களை பார்க்க போகவே மாட்டேன். இந்த படத்தில சிரிக்க வைக்கிறாங்கன்னு சொன்னாங்க. அதனால பார்க்க போனேன்.... 

எடுத்த உடனே உசிலம்பட்டிக்கு ஒரு பெரிய பில்ட் அப் கொடுத்து நம்ம உசுப்பேத்தி உட்காரவச்சாலும் படம் பாதி வரைக்கும் காமெடிதான். அப்புறம் வெட்டு குத்துன்னு போய் நம்மளை பயம் காட்டி கடைசில பாக்கியராஜூக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும்ல, அது மாதிரி நம்ம சசிகுமாருக்குன்னு உள்ள ஸ்டைல்ல படத்தை முடிச்சிட்டாங்க...

ஹீரோ அறிமுகம் 'தமிழ் படம்' ன்னு சிவா நடிச்சு  வெளி வந்துதே (scoof film) அதை ஞாபகப்படுத்தியது.   கொஞ்சம் செயற்கையா இருந்தது. ஆனா பாட்டு நல்லா இருந்தது. பாட்டிகளும் நல்லா  இருந்தாங்க...

படம் முழுவதும் பார்க்க பார்க்க சசிகுமார்....சசிகுமார்....சசிகுமார்.....துறுதுறுப்பா சிரித்த முகத்துடன் ரொம்ப ரொமான்டிக்கா....இப்படியே எல்லா படத்திலும் நடிச்சா நல்லா  இருக்கும். முதலில் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அந்த கண்களில் தெரிந்த குறும்பும் சிரிப்பும் சசிகுமாருக்கு ஒரு வெல்கம் போட வைத்துவிட்டது.



அடுத்து இனிகோ பிரபாகரன் கொஞ்சம் அழகுதான். காதல் வந்து பொய்யாக பாடலில் காதலை நல்லாவே காட்டியிருக்கிறார். அப்புறம் சூரியை பற்றி சொல்லியேயாகனும். இந்த மாதிரி சாதாரணமாக நல்லா நடிக்கிறவங்களை சசிகுமார் மாதிரி ஒன்றிரண்டு பேர்தான் பயன்படுத்தனுமா என்ன.... அப்புக்குட்டி ஓகே...

கதாநாயகி

அடுத்து ஹிரோயின் லக்ஷ்மி மேனன். பெரிய பிரமாத அழகு இல்லைதான். பெரிய நடிப்பும் இல்லைதான். அதற்காக அஞ்சலி மாதிரி ஓவர் அலட்டலும் இல்லை. போதும் இந்த படத்துக்கு......


இவர்தான் இசை 

இசைக்காக ரகுநந்தனுக்கு ஒரு சபாஷ் போடலாம். கிராமத்து இசை கேட்க சுகமாக இருக்கிறது....'ரெக்கை முளைத்தேன்'  பாடலில்  வேறு ஏதோ பாட்டின் சாயல் தெரிகிறது. பரவாயில்லை...பாட்டு நல்லா  இருக்கிறதாலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.  'காதல் வந்து பொய்யாக' பாட்டில்  ஹரிச்சரனின் குரல் சொக்கவைக்கிறது.

சரி....இனி கதைக்கு வருவோம்....
அதிசயமா இந்த படத்தில கொஞ்சமா கதை இருக்குப்பா...

காதல், கொலை, வெட்டு, குத்து எது வேணும்னாலும் நீங்க பண்ணலாம்....அப்பான்னு ஒருத்தர் மட்டும் கொஞ்சம் பசையோட  இருந்தா போதும்ங்கிற கிராமத்து லாஜிக்கை வைத்துதான் கதையை ஒட்டியிருக்கிறார்கள். திருப்பியும் இன்னொரு முறை நட்பை உயிர்ப்பித்து இருக்கிறார்கள். 

இவர்தான் டைரக்டர்

ஊரில அத்தை பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆனாலும் குழந்தை பெத்தாலும் இருக்கிற மவுசை அழகா உறவோட காமிச்சிருக்கார் டைரக்டர். முதல் படம்ன்னு சொல்ல முடியலை. சசிகுமாருக்கு கீழே வேலை பார்த்த அனுபவம் படம் முழுவதும் பேசுது. 

கொஞ்ச நாளைக்கு அப்புறமா ஒரு படத்தை குடும்பத்தோட உட்கார்ந்து சிரிச்சி பார்க்கலாம்னா அது இதுவா தான் இருக்கும். இப்படி அப்பப்போ ஒரு படம் வந்தா பொம்பளைங்க நாங்க கொஞ்சம் சந்தோஷப்படுவோம்ல....

தியேட்டர்ல போய் பார்க்க வேண்டிய படம்.....

Friday, 27 January 2012

அக்கா - தங்கை பாசம்

மனதை வருடும்......


           வேட்டை படத்தில் வரும் 'தைய  தக்க  தக்க..... அக்காகேத்த மாப்பிள்ளை' பாடல் ஹரிணி மற்றும் சைந்தவியின் குரலில் பெண்களாகிய எங்களுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு அக்கா தங்கையின் அன்யோன்யத்தை திரையில் காண்பித்தது.சமீரா ரெட்டியும் அமலா பாலும் ரொம்ப அழகு இதில். சகோதரிகளின் இடையே இருக்கும் அன்பு, மனம் விட்டு பழகும் விதம்,அந்த வயதின் நெருக்கம் எல்லாமே தனிதான். இந்த பாட்டு அதை உயிர்ப்பித்துவிட்டது.  பார்க்கும் போதே சகோதரிகளின் பாசமும் ஆட்டமும் பாட்டமும் மனதுக்குள் சந்தோஷத்தை கொடுத்தது. நன்றி அந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமிக்கு....


பெண்களுக்கு மலரும் நினைவுகள் ....
ஆண்களுக்கு enjoy.....